Friday, November 13, 2009

பெண்மணியே உன் வழி என்ன?


இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்கள் ஓரளவு விழிிப்புணர்வுடன் குர்ஆன், ஹதீது வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் சகோதரிகளே உங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் நிலையை சற்று சிந்தித்துப்பார். இஸ்லாம் இயம்பும் முறைப்படி உன் வாழ்க்கை அமைந்துள்ளதா? அன்னை பாத்திமா(ரலி) வாழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றாயா? நபி(ஸல்) அவர்களின் வழியை பின்பற்றுகின்றாயா? மறுமையை நினைத்து நரகத்தை நினைத்து வருந்தினாயா? ஏதோ! இஸ்லாத்தில் பிறந்து விட்டோம் என்ற இருமாப்பில் இன்பம் கண்டுக் கொண்டு இருக்கிறாய்.

  உன் வாழ்க்கையை சற்றே குர்ஆன், ஹதீதுடன் ஒப்பிடு. மார்க்கத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டு. மார்க்கக் கல்வி கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது கடமை என்று அல்லாஹ்வும் ரசூலும்(ஸல்) கூறியுள்ளதைப் பார். குர்ஆன், ஹதீதை அறிந்துகொண்டால் அனாச்சாரங்களை அழிக்க நீயே முன்வருவாய்.

  "(நபியே) அந்நாளில் பலூட்டிக் கொண்டிருந்த ஒவ்வொருத் தாயும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பஸ்த்திரியின் கர்ப்பமும் சிதைந்து விடுவதை நீர் காண்பீர். மனிதர்களை சித்தமிழந்தவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (சித்தம் இழக்க காரணம்) போதையினால் அல்ல, அல்லாஹ்வுடைய வேதனையானது மிகவும் கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு) அவர்கள் சித்தமிழந்து விடுவார்கள். (அல்குர்ஆன் 22:2) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் சகோதரியே; சிந்தித்துப்பார்.

  "நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அந்த இரண்டையும் கடைபிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழி தவறவே மாட்டீர்கள் ஒன்று அல்குர்ஆன் இரண்டு என்னுடைய சுன்னத்தான வழிமுறை" (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்:முஅத்தா

என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்க நீ யாரைப் பின்பற்றுகிறாய்? யாருடைய பாதையை பின்பற்றி உன் வாழ்க்கைத் தேய்கிறது. பண்டிதர்கள், தலைவர்கள் என்று தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூறுவதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் மார்க்கம் என்று எடுத்து நடக்கிறாய்.

  இறைவன் கூறுவதைப்பார், ஈமன் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அனேகர் மக்களின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிடுகின்றார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களை தடுக்கின்றார்கள். (அல்குர்ஆன் 9:34)

  பெரியவர்கள் சொல்வதெல்லாம் சிந்தித்து விளங்காமல் மார்க்கம் என்று எண்ணினாயே? இறைமறை கூறுவதைப்பார். மேலும் (17:27, 24:51, 28:50, 20:124) ஆகிய வசனங்களையும் உற்றுநோக்கு. உன் நிலையையும் நீ எண்ணிப்பார்.

  உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அவ்லியாக்களின் கப்ரை நோக்கி ஓடுகின்றாய், யார் யாருக்கோ நேர்ச்சை செய்கின்றாய், முரீது கொடுக்கும் முல்லாக்களின் காலில் விழுந்து தன்மானம் இழந்து நிற்கின்றாய், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு பாடுபட்டார்களோ அத்தனை மூட நம்பிக்கைகளையும் குத்தகை எடுத்துக்கொண்டு கும்மாளம் போடுகின்றாய். இதுதான் உன் இஸ்லாத்தின் பண்பா? இதுதான் நீ இஸ்லாத்தின் மீது வைத்துள்ள அன்பா?

  அல்லாஹ்வையன்றி நீ அழைப்பவர்கள் அழிந்துவிடுபவர்கள் என்று நபி(ஸல்) அறிவுரை பகர்ந்தார்கள். ஆனால் நீ செய்வது என்ன? உன் தேவை நிறைவேற "யாமுஹய்யத்தீன்" என்று அழைக்கின்றாய். என்றோ மெளத்தாகி விட்டவர் உன் அழைப்பை கேட்கிறார் என்றால் விந்தையாக உள்ளது. உனது கூற்று நியாயமானதா? குர்ஆனுடம் ஒப்பிடு.

  நபியே! கப்ருகளில் உள்ளவர்களைச் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. (35:22) உன் கூற்று சரியா? அல்லது குர்ஆனின் கூற்று சரியா? சிந்தித்துபார். இணைவைக்கும் காரியத்தில் நீ உன்னை ஈடுபடுத்திக்கொள்ளாதே. அல்லாஹ்வின் தகுதிகளை அவனது அடிமைகளுக்கு தந்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே.

  எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்கள் செய்கின்றார்களோ அவர்கள் "பிர்தவ்ஸ்" என்னும் சுவர்க்கத்தில் உபசரிக்கப்படுவார்கள் அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (18:107,108)

  நீ இறைவன்மீது வைத்த அன்பிற்காக இறைவன் உனக்கு சுவர்க்கத்தை நிரந்தரமாக தருவதாக வாக்களிக்கின்றான் இதைவிட மாபெரும் பாக்கியம் உனக்கு என்னவேண்டும்.

  நிராகரிப்பவர்கள் என்னையன்றி என்னுடைய அடியார்களை தம் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளலம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக அவர்களுக்கு நாம் நரகத்தையே தயார் செய்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 18:102)

  அல்லாஹ்வையன்றி அவனது அடியாளர்களை அழைப்பதை குறித்து இறைவன் எவ்வளவு கடுமையாக எச்சரிக்கிறான் என்பதை ஆராய்ந்துபார்.

  இவ்வுலக வாழ்க்கை உன்னை வீன் வழியில் அழைத்து சென்றுவிடாமல் எச்சரிக்கையாக இரு. உனக்கு ஏதாவது ஒரு தீங்கு நேர்ந்தால் உடனே மண்ணறையை நோக்கி ஓடுகிறாய். உன் ஓட்டத்தின் முடிவு உன்னையே நரகிற்கு அனுப்பும்; அதற்கு முன் உஷாராகிவிடு உன் செயல்களை திருத்திக்கொள். கப்ரு மோகம் கொண்டு அலையும் உன் நிலையை உடன் மாற்றிக்கொள்.

  கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சாபம் உனக்கு தேவையா? யோசித்து உன்செயலைத் திருத்திக்கொள். முரீது விற்பனை முல்லாக்கள் உன்னை முடக்க முற்படுவார்கள். முடங்கிவிடாமல் தவ்ஹீதின் பாதையில் முன்னேறிச் செல்.

  அல்லாஹ்வின் குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளையும் கடைப்பிடித்துச் செல். அதுவே உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுந்தர வழியாகும்.

வஸ்ஸலாம்.
கு.நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை
Thanx:readisla.net


No comments:

Post a Comment